கடலோடு கலவாத நதி
இது கடலோடு கலவாத நதி
உப்போடு உறவாட
ஒப்பாத மனம் கொண்டு
தப்பென்று சொன்னாலும்
தளராத நிலை கொண்டு
கடலோடு கலவாத நதி
இது கடலோடு கலவாத நதி
கடலுக்கு என்மீது
கடுங்கோபம் வந்தாலும்
கரைஎங்கும் எனைநோக்கி
காரி அது உமிழ்ந்தாலும்
கலங்காமல் நடை போடும் நதி
இது கலங்காமல் நடை போடும் நதி
வருகின்ற வழியெங்கும்
வயலுக்குத் தாகம்
வயல்தாகம் தீர்ப்பதிலே
எனக்கு உற்சாகம்
பிறர்தாகம் தணிக்கின்ற நதி
இது பிறர்தாகம் தணிக்கின்ற நதி
அதிகாலை ஏரோடு
அவன் கால்கள் சேறோடு
அவன் பாதம் கழுவத்தான்
நீ சென்று போராடு
உழைப்பாரைத் தொழுகின்ற நதி
இது உழைப்பாரைத் தொழுகின்ற நதி
இந்நாடு வளமோடு
எந்நாளும் இருக்க
இருபோகம் முப்போகம்
என்றாலும் செழிக்க
தன்னாலே பணி செய்யும் நதி
இது தன்னாலே பணி செய்யும் நதி
வற்றுகிற காலம் வரை
வயலுக்குச் சொந்தம்
வற்றிவிட்ட பின்னாலோ
மணலுக்குச் சொந்தம்
கடலோடு கலவாத நதி
நான் கடலோடு கலவாத நதி